29.05.2026

உலு திராமில் குர்பானிக்காக தயார் செய்யப்பட்ட எருமை தாக்கி பலி
45 வயது நபர் உயிரிழப்பு – வைரலான வீடியோ அதிர்ச்சி
ஜொகூர், மே 29 – ஹரி ராயா ஹாஜி குர்பானி சடங்கிற்காக தயாராக்கப்பட்டிருந்த எருமை ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாக்கியதில், 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஜொகூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் கடந்த புதன்கிழமை, மே 27ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில் ஜொகூர் மாநிலத்தின் உலு திராம் அருகிலுள்ள கம்போங் தெனாங் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அக்மாட் ஷா மீராசா (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது, ஹரி ராயா ஹாஜி குர்பானி சடங்கிற்காக எருமையை கட்டுப்படுத்தும் பணியில் அவர் உட்பட பலர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வேளையில், திடீரென ஆவேசமடைந்த எருமை கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்தவர்களை நோக்கி பாய்ந்தது. அதனை அடக்க முயன்றபோது, அக்மாட் ஷாவை எருமை நேரடியாக தாக்கி தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.
கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அதே நாள் இரவு சுமார் 11 மணியளவில் அவர் உயிரிழந்ததாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ACP முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான சுமார் 40 விநாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், எருமை கட்டுப்பாட்டை இழந்து வீட்டு வளாகத்தில் சீறிப்பாய்வதும், பின்னர் பாதிக்கப்பட்டவரை தாக்கி தூக்கி எறிவதும் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரி ராயா ஹாஜி காலங்களில் குர்பானி மிருகங்களை கையாளும் போது பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
போலீசார் இந்த சம்பவத்தை திடீர் மரணமாக வகைப்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















