கோலாலம்பூர், 4 மே 2026

பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்கள், மஜ்லிஸ் அமனாஹ் ரக்யாட் (MARA) அமைப்பின் அறுபது ஆண்டு நிறைவை முன்னிட்டு வழங்கிய உரையில், இந்த விழாவை ஒரு சாதாரண ஆண்டு நினைவு தினமாக அல்லாமல், நாட்டின் சமூக நீதி மற்றும் சமநிலைக் கொள்கைகளின் நீண்ட பயணத்தை பிரதிபலிக்கும் முக்கிய தருணமாகக் கருத வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர் குறிப்பிட்டதாவது, திறமை (merit), சமத்துவம் (equity) மற்றும் சமூகப் பொறுப்பு (social responsibility) ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை நிலைநிறுத்தும் முயற்சியே நாட்டின் எதிர்காலத்தை உள்ளடக்கியதாக மாற்றும் முக்கிய அம்சமாகும்.

‘அஃபர்மேட்டிவ் ஆக்ஷன்’ (affirmative action) குறித்த விவாதங்கள் தொடர்ந்து நிலவிவருகின்றன என்றும், அவை பல சமயங்களில் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் குறுகிய பார்வைகளில் சிக்கிக் கொள்ளப்படுகின்றன என்றும் பிரதமர் கூறினார். குறிப்பாக, அமெரிக்க சிந்தனையாளர் தாமஸ் சொவேல் முன்வைத்த “tyranny of merit” என்ற விமர்சனத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வது பொருத்தமல்ல என்றும், அது உள்ளூர் சமூக நிதர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் விடுகிறது என்றும் அவர் விளக்கினார்.
இதற்கு மாறாக, பொருளாதார அறிஞர் ஜான் கென்னத் கல்விரெய்த் முன்வைத்த சமூக நீதி கோட்பாடுகளை சுட்டிக்காட்டிய அவர், சமத்துவம் என்பது வெறும் கோஷமல்ல; அது சமூக அமைப்பின் அடிப்படை தேவையாகும் என்றார். நீண்ட காலமாக உருவாகியுள்ள சமூக இடைவெளிகளை சரிசெய்வதற்காகவே இத்தகைய கொள்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தத்துவஞானி ஜான் ரால்ஸ் முன்வைத்த “justice as fairness” என்ற கருத்தை எடுத்துரைத்த பிரதமர், சமமான அணுகல் (equal access) இல்லையெனில், உண்மையான நீதி சாத்தியமில்லை என்றார். நகர்ப்புறத்தின் சிறந்த பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களையும், கபிட், மனிக் உராய், ஹுலு கிளந்தான் அல்லது ஹுலு பஹாங் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களையும் ஒரே அளவுகோலில் போட்டியிடச் செய்வது நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, MARA அமைப்பு கல்வி, தொழில் முனைவுத் திறன் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் முக்கிய தளமாக தொடர்ந்தும் செயல்படும் என்றும், பின்புலம் அல்லது புவியியல் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மலேசியரும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
இவ்விழா, MARA அமைப்பின் ஆறு தசாப்தப் பயணத்தை மட்டுமன்றி, மலேசியாவின் உள்ளடக்கிய மற்றும் சமநிலை கொண்ட வளர்ச்சி நோக்கத்தின் மீதான உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.














