இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆலயத்திற்கு மலேசிய இந்து சங்கம் பட்டர்வொர்த் பேரவையின் நிதியுதவி

மே 28, 2026

சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட செபராங் பிறை, தெலுக் ஆயிர் தாவார் பகுதியில் அமைந்துள்ள பெர்சத்துவான் தேவி ஸ்ரீ கோலவிழிலியம்மன் ஆலயத்தின் மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக மலேசிய இந்து சங்கம் (MHS) பட்டர்வொர்த் பேரவை நிதியுதவி வழங்கி சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிதியுதவி ஒப்படைப்பு நிகழ்வு கடந்த மே 22, 2026 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பேரிடரால் சேதமடைந்த ஆலயத்தின் புனரமைப்பு, சுத்திகரிப்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளை விரைவாக முன்னெடுக்க உதவும் நோக்கில், பேரவை சார்பில் ஆலய நிர்வாகத்திடம் நிதி வழங்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்தால் ஆலயத்தின் முக்கிய கட்டமைப்புகள் மற்றும் சுற்றுப்புற வசதிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆலய நிர்வாகம் அவசர மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய மலேசிய இந்து சங்கம் பட்டர்வொர்த் பேரவை பிரதிநிதிகள், “ஆன்மிக மையங்கள் என்பது வெறும் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல; அவை சமூக ஒற்றுமை, பண்பாட்டு மரபு மற்றும் மனிதநேயத்தின் அடையாளங்களாகும். இத்தகைய தலங்கள் பேரிடரால் பாதிக்கப்படும் வேளையில் சமூகமே ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்,” என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த உதவித் திட்டம் வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைத்து நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்களுக்கும் பேரவை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டது.

“அன்பே சிவம்” என்ற உயரிய தத்துவத்தை முன்னிறுத்தி சமூகப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மலேசிய இந்து சங்கம் பட்டர்வொர்த் பேரவை, எதிர்காலத்திலும் பேரிடர் நிவாரணம், கல்வி, சமூக நலன் மற்றும் ஆன்மிகப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் தனது சேவைகளை விரிவுபடுத்தும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்த மனிதநேய உதவி முயற்சி சமூகத்தினரிடையே பாராட்டைப் பெற்றதுடன், பேரிடர் காலங்களில் சமூக ஒற்றுமையின் அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *