கோலாலம்பூர், பிப்ரவரி 2, 2026

பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி பாரிமலா கிருஷ்ணா அவர்களுக்கு, அவரின் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டும் விதமாக சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தப் பாராட்டு, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோக் சுரேஷ் மற்றும் டத்தோ ஸ்ரீ நடராஜா ஆகியோரால் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவின் போது பத்துமலையில் திரளாக வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டுதல், உதவி மற்றும் சேவை வழங்குவதில் திருமதி பாரிமலா கிருஷ்ணா முக்கிய பங்காற்றி வருகிறார்.
பல ஆண்டுகளாக இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னார்வ சேவை, சமுதாய சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. “பக்தர்களுக்கு சேவை செய்வதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலன். இருப்பினும், இந்த பாராட்டு என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது,” என திருமதி பாரிமலா கிருஷ்ணா தனது நன்றியை தெரிவித்தார்.
தைப்பூசம் போன்ற மகத்தான சமய விழாக்களில் தன்னார்வலர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், திருமதி பாரிமலா கிருஷ்ணா போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.














