கோலாலம்பூர் | 30 மே 2026

மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா.) தனது 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுத்து வரும் ஆன்மீக மற்றும் சமய நிகழ்வுகள் குறித்து சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான பெரு.அ.தமிழ்மணி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ம.இ.கா. ஒரு அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டு, எட்டு தசாப்தங்களாக மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னெடுத்து வந்துள்ள நிலையில், அதன் 80ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் மதச் சடங்குகள், யாகங்கள், பூஜைகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை மையப்படுத்தி நடைபெறுவது கட்சியின் அடிப்படை அடையாளம் குறித்து சந்தேகங்களை உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“ம.இ.கா. இந்தியர்களின் கட்சியா அல்லது இந்துக்களின் கட்சியா?” என்ற கேள்வியை முன்வைக்கும் அவர், மலேசிய இந்திய சமூகம் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டது என்பதை நினைவூட்டுகிறார். இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த இந்தியர்களும் கட்சியின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் உள்ளனர் என சுட்டிக்காட்டுகிறார்.
அரசியல் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் விழாக்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட மத அடையாளத்தை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் தேவையற்ற குழப்பங்களையும் பிரிவினை உணர்வுகளையும் உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மதச்சார்பற்ற தன்மை என்பது ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அது தனிநபர்களின் மத நம்பிக்கைகளை கட்டுப்படுத்துவதாக அல்ல; மாறாக, அனைத்து மதத்தினருக்கும் சமமான இடமளிக்கும் நிர்வாக மற்றும் அரசியல் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சியும் வலிமையும் பூஜைகள், மந்திரங்கள் அல்லது சமயச் சடங்குகளின் மூலம் அல்ல; மக்களுடனான நேரடி தொடர்பு, சேவை மனப்பான்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மூலமே ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
“மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதுதான் ஒரு அரசியல் இயக்கத்தின் உண்மையான கடமை. சமய நிகழ்வுகள் அதற்குப் பதிலாக இருக்க முடியாது,” என்று அவர் கூறியுள்ளார்.
ம.இ.கா. கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் அரசியல் சவால்கள் மற்றும் ஆதரவு குறைவு ஆகிய சூழ்நிலையில், மக்களுடன் மீண்டும் நெருக்கமாக இணைவதே கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய வழியாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“80 ஆண்டுகளோ, 800 ஆண்டுகளோ கடந்தாலும் மக்கள் நம்பிக்கையைப் பெறாத அரசியல் அமைப்புக்கு வளர்ச்சி சாத்தியமில்லை. மாற்றத்தை உருவாக்குவது தலைவர்களால் மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளால் மட்டுமே அது சாத்தியமாகும்,” என பெரு.அ.தமிழ்மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களிலும் சமூக அமைப்புகளிடையிலும் விவாதத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, ம.இ.காவின் எதிர்கால திசை, அதன் மதச்சார்பற்ற அடையாளம் மற்றும் மலேசிய இந்திய சமூகத்தின் பல்வகைமைக்கு ஏற்ப அது தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறது என்ற கேள்விகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.















