“வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும் என்ற பழமொழியைப் போல, நோய்கள் தீவிரமடையும் முன்பே கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். உடல்நலத்தை அலட்சியம் செய்யாமல், மக்கள் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,”

கிள்ளான், மே 28

 இந்திய சமூகத்தினர் தங்களின் உடல்நல பாதுகாப்பிற்காக கட்டாயமாக மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மஇகா தலைவரும் கோத்தா ராஜா தொகுதி தலைவருமான டத்தோ சங்கர் ராஜ் ஐயாங்கர் வலியுறுத்தினார்.

கிள்ளான் தாமான் செந்தோசா குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் உயிர் பாதுகாப்பும் மருத்துவச் செலவுக் குறைப்பும் சாத்தியமாகும் என்றார்.

இம்மருத்துவ முகாமை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்த மெர்சி கேர் கிளினிக் மற்றும் மொசிக்கோ மருந்தக நிர்வாகத்தினரின் சமூகப்பணி பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். சமூக நலனில் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது மக்களுக்கு பெரும் பயனளிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இளைஞர்கள் தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், சிலாங்கூர் மாநில மஇகா சார்பில் விரைவில் வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்குகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதனிடையே, மொசிக்கோ மருந்தகத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சீனிவாசகராவ் மரியா, தங்களது மருந்தகம் தொடர்ந்து இலவச மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்த குறைந்த வருமான மக்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

அதேவேளை, அரசாங்கத்தின் மடானி மருத்துவ திட்டங்களின் பயன்களை இந்திய சமூகத்தினர் அதிகமாக பயன்படுத்த முன்வர வேண்டும் என சத்தியமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் ஆமேகி கேட்டுக்கொண்டனர்.

“இது போன்ற இலவச மருத்துவ சேவைகளில் சீன சமூகத்தினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியர்களும் இந்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று மொசிக்கோ மருந்தகத்தின் மற்றொரு பங்குதாரர் தெரிவித்தார்.

சமூக ஒற்றுமை மற்றும் மக்கள் நலனை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குனாஜ் தங்கராஜா, நகராண்மைக் கழக உறுப்பினர் ஹசினா பேகம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், அன்னையர் தினத்தை முன்னிட்டு கலந்து கொண்ட தாய்மார்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *