தேதி: 11 ஏப்ரல் 2026

புகிட் அமான் முன்னாள் ஏசிபி டத்தோ’ எஸ். சண்முகமூர்த்திக்கு “ஜாசா மூ டிகெனாங்” விருது வழங்கப்பட்டது
கோலாலம்பூர்: புகிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் (CID) முன்னாள் உதவி காவல் ஆணையர் (ACP) டத்தோ’ எஸ். சண்முகமூர்த்தி அவர்கள், PPRM அமைப்பினால் வழங்கப்படும் மதிப்புமிக்க “ஜாசா மூ டிகெனாங்” விருதால் கௌரவிக்கப்பட்டார். இந்த விருது வழங்கும் விழா “நான் வாழ வைபேன் 2026” எனும் மெகா விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கலாச்சார நிகழ்வில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட NLFCS நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்துக் பி. சஹாதேவன் அவர்கள், டத்தோ’ சண்முகமூர்த்திக்கு விருதை வழங்கினார்.
PPRM அமைப்பின் தலைவர் டத்துக் பி. குணசீலன் அவர்கள் கூறுகையில், டத்தோ’ சண்முகமூர்த்தி தனது காவல் துறை பணியை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராகத் தொடங்கி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் உயர்ந்த பதவிகளை அடைந்தவர் என்று பாராட்டினார்.
புகிட் அமான் பதவிக்கு முன்னர், செந்தூல் மாவட்ட காவல் தலைமையகத்தின் OCPD ஆக பணியாற்றிய அவர், புதுமையான மற்றும் துணிச்சலான தலைமையால் காவல் துறையின் படிமத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்தார். பொதுமக்களுக்கு விரைவான, தடையற்ற சேவையை வழங்கும் வகையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியதோடு, அவரது காலத்தில் செந்தூல் பகுதியில் குற்றச்செயல்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டன.
2024 ஆம் ஆண்டிலிருந்து UNITAR பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் டத்தோ’ சண்முகமூர்த்தி, கல்வி துறையின் வழியாகவும் சமூக சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
“டத்தோ’ சண்முகமூர்த்தி பணியாற்றிய ஒவ்வொரு இடத்திலும் ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்,” என்று டத்துக் குணசீலன் தெரிவித்தார்.
அதேவேளை, சமீபத்தில் டத்தோ’ சண்முகமூர்த்தியும் அவரது மகளும் மலேசியன் பார் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
டத்தோ’ எஸ். சண்முகமூர்த்திக்கு இந்த உயரிய கௌரவம் கிடைத்துள்ளதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.















