கோலாலம்பூர் மார்ச் 25 2026

மஇகா தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்கும் என கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறினார்.
ஏற்கனவே பெரிக்காத்தான் நேஷனலில் இணைய திட்டம் கொண்டிருந்த போதிலும், தற்போது அந்த எதிர்க்கட்சி கூட்டணிக்கு பாஸ் தலைமையேற்றுள்ளதால் தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க மஇகா முடிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார் .
இன்று கட்சியின் தலைமையகத்தில் மஇகா மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஏற்கனவே பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையேற்றிருந்ததால், அந்த எதிர் கட்சி கூட்டணியில் இணைய மஇகா பேராளர்கள் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் தற்போது நிலைமை மாறிவிட்டதால், தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க மஇகா மத்திய செயலவை முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.















