சிலாங்கூர் காற்பந்து அணி மறுசீரமைப்பு: அடிமட்ட வளர்ச்சியை மேம்படுத்த தெங்கு அமீர் ஷா திட்டம்

சிலாங்கூர் காற்பந்து அணி மறுசீரமைப்பு: அடிமட்ட வளர்ச்சியை மேம்படுத்த தெங்கு அமீர் ஷா திட்டம்

கோலாலம்பூர், பிப் 16 –

பள்ளி மற்றும் இளைஞர் மட்டத்திலிருந்து பிரதான குழு வரை அடிமட்ட மேம்பாட்டைப் பலப்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் கால்பந்து அணி (Selangor FC) தனது அமைப்பை மறுசீரமைப்பு செய்கிறது. மாநிலத்தின் கால்பந்து கட்டமைப்பு விரிவாகவும் திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா தெரிவித்தார்.

 

நிர்வாகத்தில் தொழில்முறை அணுகுமுறை தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும், கழகத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமான உறவை வலுப்படுத்துவதே தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றைய கால்பந்து என்பது வெறும் ஆட்டம் மட்டுமல்ல; அது ஒரு வலுவான நிறுவனத்தையும் சமூகத்தையும் உருவாக்குவது சார்ந்தது என அவர் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் விவரித்தார்.

 

இந்தச் சிறப்பான நிகழ்வில் சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களும் நேரில் கலந்துகொண்டு ‘ஜெமிலாங்: சிலாங்கூர் கால்பந்தின் வரலாற்றுப் பயணம்’ எனும் நூலை வெளியிட்டார். பாரம்பரிய அடையாளங்களைச் சிதைக்காமல், கால்பந்து நிர்வாகத்தை நவீனமாகவும் போட்டித்தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இளவரசர் தெங்கு அமீர் ஷா வலியுறுத்தினார்.

 

இதற்கிடையில், மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) தலைவர் பதவிக்கு போட்டியிட தமக்கு எவ்வித விருப்பமும் இல்லை என்று அவர் மிகத் தெளிவாகத் தெரிவித்தார். தற்போது சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் (FAS) வளர்ச்சியில் மட்டுமே தமது முழு கவனமும் இருப்பதாகவும், அங்கு சாதிக்க வேண்டிய இலக்குகள் பல உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

முன்னதாக, FAM தலைவர் பதவிக்கு பகாங் சுல்தான் மற்றும் ஜொகூர் பட்டத்து இளவரசருடன் சேர்த்து தெங்கு அமீர் ஷாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், தேசிய அளவிலான பொறுப்பை விட மாநில அணியின் மேம்பாட்டிற்கே தான் முன்னுரிமை அளிப்பதாக இளவரசர் தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

 

வெளியிடப்பட்ட ‘ஜெமிலாங்’ புத்தகம் 200 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, இதன் மூலம் கிடைக்கும் லாபம் சிலாங்கூர் அணியின் மூத்த வீரர்களின் நலநிதிக்கு வழங்கப்படும். கால்பந்தின் பொற்கால வரலாற்றை விவரிக்கும் இந்த முயற்சி, முன்னாள் வீரர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒரு உன்னத நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *