தேதி: 4 ஜூலை 2026

ஜோகூர் பாரு, 4 ஜூலை – வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மாநில மக்களிடம் பணிவுடன் வேண்டுகோள் விடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜோகூரை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) வேட்பாளர்களுக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்குமாறு அழைப்பு விடுத்தார்.
தாம் வழங்கப்படும் நம்பிக்கையையும் பொறுப்பையும் மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவோம் என்றும், மக்களின் ஆணையை ஒருபோதும் வீணடிக்கமாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை, நல்லாட்சி, பொறுப்புணர்வு மற்றும் நீதி ஆகியவை அரசின் அடிப்படைத் தூண்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், இஸ்லாமிய போதனையிலிருந்து ஒரு வசனத்தையும் மேற்கோள் காட்டினார்.
“நிச்சயமாக, அல்லாஹ் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றிற்கு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும், மனிதர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கும்போது நீதியுடன் தீர்ப்பளிக்குமாறும் உங்களுக்கு கட்டளையிடுகிறான்.”
இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் நலன், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்புகள், முதலீட்டு வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நிர்வாகத்தை உருவாக்குவதே ஹராப்பானின் நோக்கமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
“Johor Ke Depan. Undi HARAPAN” என்ற தேர்தல் முழக்கத்துடன், ஜோகூரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தல், ஜோகூரின் அடுத்த கட்ட வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கியமான ஜனநாயகத் தீர்மானமாக அமையும் என்றும், மக்கள் அறிவார்ந்த முறையில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.















