கோலாலம்பூர், மார்ச் 24 –

நாட்டைத் தாக்கி வரும் தற்போதைய வெப்ப அலை நிலைமை ஜூன் மாதம் வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக Malaysian Meteorological Department தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Hisham Anip கூறுகையில், மார்ச் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
வடகிழக்குப் பருவமழை முடிவடைந்ததைத் தொடர்ந்து மேகமூட்டம் குறைந்து, சூரியன் நேரடியாக உச்சியில் இருப்பதனால் வெப்ப அலை நிலை உருவாகுவது வழக்கமான ஒன்றாகும் என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், காற்றின் போக்கு பலவீனமடைந்துள்ளதால் இந்த வார இறுதி முதல் சில பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பருவமழை மாற்றக் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றது. எனினும், அடுத்த வாரத்திலும் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 🌦️
மேலும், இன்டோசீனா பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காரணத்தால், நாட்டின் வடக்கு மாநிலங்கள் மற்ற பகுதிகளை விட அதிக வெப்பத்தை அனுபவித்து வருவதாகவும் Malaysian Meteorological Department தெரிவித்துள்ளது.
மக்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தண்ணீர் அருந்துதல், வெளிப்புறச் செயல்பாடுகளை குறைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.















