
ஷா ஆலம், ஜன.12:
தைப்பொங்கலை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பொங்கல் தமிழர் திருவிழா வரும் ஜனவரி 17 ஆம் தேதி, அம்பாங் டத்தோ அமாட் ரசாலி மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன், ‘கித்தா சிலாங்கூர்’ (Kita Selangor) திட்டத்தின் கீழ் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா, காலை மற்றும் மாலை என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஜனவரி 17 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, அம்பாங் ஜெயா, கம்போங் தாசேக் பெர்மாயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் முதல் தைப்பொங்கல் விழா நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை, அம்பாங் டத்தோ அமாட் ரசாலி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா அதிகாரப்பூர்வமாக நடைபெறும்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இந்த விழாவில்,
டத்தோ இர். இஷாம் பின் ஹாஷிம் (சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர்),
மாண்புமிகு முகமட் ரஃபிஸி பின் ரம்லி (பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர்),
புவான் ஹாஜா ரோட்சியா பிந்தி இஸ்மாயில் (அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்)
உட்பட மாண்புமிகு முகமட் கம்ரி, இயூ ஜியா ஹாவ், சையத் அகமட் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
Malaysia MADANI கொள்கையின் கீழ், பல்லின மக்களிடையே ஒற்றுமை மற்றும் கலாச்சாரப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவாக திகழும் தைப்பொங்கலை சிறப்பிக்கும் வகையில், இவ்விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், அனைவருக்கும் வாழை இழையில் சுவையான சைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















