குலிம், கெதா – டிசம்பர் 10, 2025

அருள்மிகு ஸ்ரீ நாகலட்சுமி அம்மன் ஆலயத்தின் 70 ஆண்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவு
கெதா மாநிலம் குலிம், Rumah Murah, Labuh Beaar, Kulim பகுதியில் அமைந்துள்ள 70 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று பெருமை கொண்ட அருள்மிகு ஸ்ரீ நாகலட்சுமி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 07 டிசம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆன்மிக மகிமையுடன் நடைபெற்று சிறப்பாக நிறைவு பெற்றது.
அளவில் சிறிய ஆலயமாக இருந்தாலும், பக்தர்களின் அசாதாரண வருகை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அம்மனின் அருள், அற்புதங்கள், அதிசய தரிசனங்கள் எனப் பல காரணங்களால் தூரத் தூரமாக இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர். சமயம் சார்ந்த பல நிகழ்ச்சிகள் நடைபெறும் இவ்வாலயம், உள்ளூர் இந்து சமூகத்தின் முக்கிய ஆன்மிக மையமாக திகழ்கிறது.
கும்பாபிஷேக நிகழ்வுகள் சிவஸ்ரீ கோவிந்தராஜ் சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் வேத மந்திர ஓசையுடன் நடைபெற்றன. கிட்டத்தட்ட 500-க்கும் அதிகமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அனைவரும் பக்தி உணர்ச்சியோடு பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர்.
இவ்வாலயத்தைத் தலைவராக இருந்து சிறப்பாக பராமரித்து வருபவர் திரு சூரிய தேமுடு அவர்கள். அவரது தலைமையில் பல புதுப்பிப்பு மற்றும் சமயச் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுத்து வரப்படுகின்றன.
நிகழ்வில் மக்கள் கலைஞர் கவிமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கும்பாபிஷேக நெறிகள், அதன் ஆன்மிக முக்கியத்துவம் குறித்து உரையாற்றி பக்தர்களின் பாராட்டைப் பெற்றார்.
இவ்விழா பக்தி, ஒற்றுமை, ஆன்மிகம் ஆகியவற்றின் சங்கமமாக அமைந்தது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் அம்மன் அருளால் ஆனந்தமும் அமைதியும் பெற்றனர்.















