மலேசியாவில் பாகிஸ்தானியர்களின் பங்களிப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்துகிறது – பிரதமர் அன்வார் இப்ராஹிம்

மலேசியாவில் பாகிஸ்தானியர்களின் பங்களிப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்துகிறது – பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்: 06.10.2025

மலேசியாவில் தொழில் வல்லுநர்கள், திறமையான தொழிலாளர்கள் அல்லது மாணவர்கள் எனப் பல்வேறு தளங்களில் இருக்கும் பாகிஸ்தானியர்களின் இருப்பு, மலேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 

மலேசியாவில் உள்ள பாகிஸ்தான் சமூகத்தின் நலன் மற்றும் தேவைகள் குறித்து, குறிப்பாக தொழில் மற்றும் கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் தேவைகளை ஆராய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார்.

 

பாகிஸ்தானைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், தொழிலாளர்கள், மற்றும் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், மேலும் உயர் நிலையை அடைந்து, தொடர்ந்து இங்கு வசிக்க ஆதரவு தேவைப்படுவோரின் நலன் மற்றும் விருப்பங்களை அரசாங்கம் ஆராயும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப் உடனான கூட்டறிக்கையின்போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். பாகிஸ்தான் தலைவரின் இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம், தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற துறைகளில் புதிய மூலோபாய ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களில் உயர்கல்வி, சுற்றுலா மற்றும் ஹலால் சான்றிதழ் போன்ற துறைகளில் மலேசிய அரசுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசுக்கும் இடையேயான ஒத்துழைப்பு அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *