காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனம்- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம்

கோலாலம்பூர்:
பாலஸ்தீனியர்கள் மற்றும் கத்தார் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு மலேசியா தொடர்ந்து தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.
இஸ்ரேலின் இந்தச் செயல்கள் சர்வதேச சட்டங்களை மீறும் ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் திமிரான செயல் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய இஸ்லாமிய நிதியியல் விருதுகள் 2025 நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த சில நாட்களாக நடந்துவரும் மனிதாபிமானமற்ற குண்டுவீச்சு, ஒரு நாட்டின் தீவிரமான நடவடிக்கைகள் பிராந்தியத்தில் பேரழிவு, அழிவு மற்றும் கொடூரங்களை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைக் காட்டுவதாக பிரதமர் அன்வார் கூறினார். குறிப்பாக, காஸாவும், அண்மையில் கத்தாரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
உலக இஸ்லாமிய நாடுகள் ஊழலை ஒழிப்பது, அநீதியை எதிர்ப்பது மற்றும் இஸ்லாமிய நிதியியலை ஒரு நிலையான மாற்றாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் தங்கள் உள்நாட்டு நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளுக்கு எதிராக அனைத்துலக அரங்கில் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும், அதேவேளை, நீதியான, நெறிமுறையான மற்றும் ஒடுக்குமுறையற்ற சமூகத்தை உருவாக்க மலேசியா தொடர்ந்து பாடுபடும் என்றும் பிரதமர் அன்வார் உறுதியளித்தார்.















