21 மார்ச் 2026

கோலாலம்பூர்: மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், இன்று காலை இஸ்தானா நெகாராவின் சுராவ் உத்தமாவில் நடைபெற்ற ஹரி ராயா ஐதில்பித்ரி சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், யாங் டி-பெர்துவான் ஆகோங் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா பெர்மைசூரி ஆகோங் ராஜா ஸாரித் சொஃபியா ஆகிய மன்னர் தம்பதியாரும் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததையடுத்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஆகோங் அவர்களுடன் இணைந்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அழைப்பாளர்களுடன் கை குலுக்கி, இனிதாக உரையாடினார்.
இவ்விழா, ஐதில்பித்ரியின் ஆன்மிக அர்த்தத்தையும் சமூக ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. எளிமையுடனும் அர்த்தமிக்க மகிழ்ச்சியுடனும் இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது.
“இந்த ஐதில்பித்ரி, நம் அனைவருக்கும் உண்மையான மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிக்கட்டும். நம் வேண்டுதல்களும் நம்பிக்கைகளும் நிறைவேறட்டும்,” என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
மலேசியா முழுவதும் வாழும் மக்களுக்கெல்லாம் “ஈத் முபாரக்” என அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.















