ஷம்ரி வினோத் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்
-லோக பாலா எச்சரிக்கை
கோலாலம்பூர் மார்ச் 8

நாட்டில் இந்து மதத்தை தொடர்ந்து இழிவு படுத்தி வரும் ஷம்ரி வினோத் மற்றும் பிர்டாவ்ஸ் வோங் ஆகியோரை போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் பிபிபி கட்சி அதிரடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் என அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோக பாலா மோகன் எச்சரித்தார்.
அண்மைய காலமாக ஷம்ரி வினோத்,பிர்டாவ்ஸ் வோங் உட்பட சில குறிப்பிட்ட நபர்கள்
‘கோயில் ஹராம்’ என்று கூறிக்கொண்டு இந்து சமயத்தை தொடர்ந்து இழிவு படுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நபர்களுக்கு எதிராக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்ட போதும், இவர்களுக்கு எதிராக போலீசார் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இன்று கட்சியின் தலைமையகத்தில் நடந்த பிபிபி உச்ச மன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் குறிப்பாக ஷம்ரி வினோத் இந்து சமயத்தை பற்றி கேவலமாக விமர்சித்து வருவது இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் மனதை புண்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.
ஷம்ரி வினோத் போன்ற புல்லுருவிகளை கைது செய்து பிறகு ஜாமீனில் விடுதலை செய்வது போலீசாருக்கு வழக்கமாகிவிட்டதாக அவர் சாடினார்.
இந்துக்களின் மனதை புண்படுத்தி வரும் ஷம்ரி வினோத்தை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு செய்ய போலீசார் தவறினால்,பிபிபி கட்சி நிச்சயம் அதிரடி ஆர்ப்பாட்டத்தில் நிச்சயம் இறங்கும் என டத்தோ லோக பாலா எச்சரித்தார்.
இந்த விவகாரத்தில் பிபிபி கட்சி இனியும் மௌன போக்கை கடைபிடிக்காது என அவர் நினைவுறுத்தினார்.















