பிரதமர் பதவிக்கான காலக்கெடு; 2026 அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஜூன் மாதம் மீண்டும் தாக்கல்

பிரதமர் பதவிக்கான காலக்கெடு; 2026 அரசியலமைப்பு திருத்தச் சட்டம் ஜூன் மாதம் மீண்டும் தாக்கல்

கோலாலம்பூர், மார்ச் 5 – மலேசியப் பிரதமர் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் 2026 அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதா, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காதப் போதிலும், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சீர்திருத்தத்திற்கு ஆதரவாகவே இருப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் விளக்கமளித்துள்ளார்.

 

வாக்கெடுப்பின் போது வருகை தராத உறுப்பினர்களில் பலர் முறையான காரணங்களை முன்வைத்துள்ளதோடு, ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இந்த மசோதாவிற்குத் தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடாணி அரசாங்கம் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக ஃபடில்லா யூசோப் சுட்டிக்காட்டினார்.

 

இந்த உத்தேச சட்டத் திருத்தம் நாட்டின் மன்னராட்சி முறையையோ அல்லது யாங் டி-பெர்துவான் அகோங்கின் அதிகாரத்தையோ எந்த வகையிலும் பாதிக்காது என்பது மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின்படி, ஜூன் மாதம் நடைபெறவுள்ள மக்களவை கூட்டத்தொடரில் இந்த முக்கிய மசோதா மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *