23 Feb .2026

கோல்பீல்ஸ் தோட்டம்: ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ கரிமலான் சிவனேஸ்வரர் ஆலயம் வளாகத்தில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு பெருவிழா மற்றும் பெருஞ்சாந்தி நிகழ்வு பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ஞாயிற்றுக்கிழமை (22/02/2026) அதிகாலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய இவ்விழா, வேதமந்திர ஓசைகள் முழங்க, சிறப்பான முறையில் நடைபெற்றது. தொடர்ந்து திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடைபெற்று, அம்மன் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆலய வளாகம் முழுவதும் ஆன்மிக பரவசம் நிலவியது.
இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதி YB Papparaidu Veraman அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அவருடன் மண்ணின் மைந்தர்களும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது பக்தி மரியாதையை செலுத்தினர்.

ஆலய தலைவர் திரு. மணிவண்ணன் தலைமையில், துணைத்தலைவர் திரு. அறிவழகன், செயலாளர் திரு. சந்திரன் மற்றும் கிராம தலைவர் திரு. மணிவண்ணன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஒழுங்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கான அன்னதானம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெருஞ்சாந்தி பூஜையின் மூலம் உலக நலன், நல்ல மழை, சமூக ஒற்றுமை மற்றும் நாட்டின் வளம் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இந்த ஆண்டின் திருக்குட நன்னீராட்டு விழா, கோல்பீல்ஸ் தோட்ட மக்களின் ஒற்றுமையையும், பாரம்பரிய ஆன்மிக மரபுகளையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.














