திருமுறை இன்னிசை அரங்கம் 2026 – கோலாலம்பூரில் பக்திப் பரவசம்

திருமுறை இன்னிசை அரங்கம் 2026 – கோலாலம்பூரில் பக்திப் பரவசம்

கோலாலம்பூர், ஜனவரி 24:


சச்சிதானந்தா மியூசிக்கல் அமைப்பின் ஏற்பாட்டில், தெய்வீகத் தமிழ் மறையான திருமுறைகளைப் போற்றும் வகையில் நடத்தப்பட்ட ‘திருமுறை இன்னிசை அரங்கம் 2026’ கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
“திருமுறை எம் உரை முறை” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ஜனவரி 24-ஆம் தேதி மாலை 7 மணியளவில், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் வளாகத்தின் சாந்தானந்த் கலையரங்கில் அரங்கேறியது.
இந்த இன்னிசை அரங்கில் 3 வயது சிறார்கள் முதல், ஆசிரியர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் வரை பலரும் பங்கேற்று திருமுறைப் பாடல்களை பக்தியோடு பாடினர். அவர்களின் ஆன்மீக இசை நிகழ்த்தல், அரங்கில் கூடியிருந்த பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்ததுடன், முழு அரங்கையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்நிகழ்வில் ஒற்றுமை துணை அமைச்சர் திரு. யுனேஸ்வரன் ராமராஜ் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் இந்திய விவகாரப் பிரிவு சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த சச்சிதானந்தா மியூசிக்கல் நிறுவனரும், நிகழ்ச்சியின் இயக்குநருமான தேவார நாயகம் இணைப் பேராசிரியர் முனைவர் விக்னேஸ்வரன் முனிக்கண்ணன், MBA,
“திருமுறை என்பது ஆன்மீகத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒரு புனிதமான பாலம். இந்த அரங்கின் மூலம் மாணவர்கள் இசையை மட்டுமல்ல, உயிருள்ள ஒரு ஆன்மீகப் பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றனர். இத்தகைய முயற்சிகள் இளைய தலைமுறையினரிடையே நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் பக்தியை வளர்க்கும்,” எனக் கூறினார்.
மேலும் அவர்,
“திருமுறை வெறும் இசை அல்ல; அது நம் வாழ்வியல் நெறி. நம் பிள்ளைகளை ஒழுக்கமும் பக்தியும் நிறைந்தவர்களாக உருவாக்க, அவர்களைத் திருமுறை வகுப்புகளுக்கு அனுப்புவது பெற்றோரின் தலையாய கடமை,” என வலியுறுத்தினார்.
சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தொண்டூழியர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, சச்சிதானந்தா மியூசிக்கல் ஊடகச் செயலகத்தைச் சேர்ந்த திருமதி திவ்யமாலினி ராமுலு அவர்களை 014-904 6706 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *