இரண்டாவது அலை வெள்ளம்: முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் – துணைப் பிரதமர் ஜாஹித்
டிசம்பர் 16, 2025 | புத்ராஜெயா

இரண்டாவது அலை வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்று துணைப் பிரதமரும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிப்பது கடினமானதாக இருந்தாலும், தற்போதைய சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியம் என அவர் கூறினார். குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாம் வெள்ளத்தின் தீவிரத்தை முழுமையாக கணிக்க முடியாது. இருப்பினும், இரண்டாவது அலை வெள்ளம் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ஜாஹித் கூறினார்.
இந்த இரண்டாவது அலை வெள்ளம் கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜொகூர் மற்றும் சரவாக் மாநிலங்களை பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், மீட்பு அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் அனைத்தும் முழுமையான தயார்நிலையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.















