கோலாலம்பூர், டிசம்பர் 04

— சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறார்களின் வயது வரம்பு, அவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கம் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பாக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி), 2025ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்பு சட்டம் 866-இன் கீழ் பத்து துணைச் சட்டங்களை உருவாக்கி வருகிறது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தொடர்பு அமைச்சகம் தெரிவித்ததாவது,
16 வயதுக்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடக தளங்களை அணுக முடியாத வகையில், சேவை வழங்குநர்கள் தேவையான கட்டுப்பாடுகளை அமைப்பது இத்துணைச் சட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.
மேலும்,
18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்காக வெளியிடப்படும் அனைத்து இணைய உள்ளடக்கங்களும் அவர்களின் வயதிற்கு ஏற்ப பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது வழங்குநர்களின் பொறுப்பாகும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதோடு, சமூக ஊடக சேவை வழங்குநர்கள்,
-
பெற்றோர் கட்டுப்பாடு (Parental Controls),
-
பயன்பாட்டு வரையறைகள்,
-
பாதுகாப்பு அமைப்புகள்
போன்ற விருப்பங்களையும், சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க வழங்க வேண்டும் என எம்.சி.எம்.சி அறிவித்துள்ளது.
இத்துடன், இணைய சேவை மற்றும் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கான கூடுதல் விதிமுறைகளையும் எம்.சி.எம்.சி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















