“சபா அரசியலில் எதுவும் கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிவிடக்கூடும்

கோத்தா கினபாலு, நவம்பர் 21


பக்காத்தான் ஹாராப்பான் (PH) சில தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்கள் “பிரபலமானவர்கள், வெற்றி உறுதி” என்ற அணுகுமுறையில் இருக்காமல், இறுதி வரை முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பிகேஆர் உதவி தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் எச்சரித்தார்.

“சபா அரசியலில் எதுவும் கடைசி நிமிடத்தில் தலைகீழாக மாறிவிடக்கூடும். இதுதான் இங்குள்ள அரசியல் நிஜம். கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் தம்மை ‘சாதாரணமாகவே வெற்றி பெறுபவர்கள்’ என்று எண்ணிக் கொள்ளக்கூடாது.
இங்கு போட்டி மிகவும் கடுமையானது,” என்று அவர் தெரிவித்தார்.

சபாவின் மொயோக் தொகுதியில் பக்காத்தான் வேட்பாளர் ரெமிஸ்தா ஜிம்மி தெய்லர்-க்கு ஆதரவாக நடத்தப்பட்ட பிரசார நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ரமணன், பக்காத்தானின் தேர்தல் இயந்திரம் தற்போது முழு தீவிரத்துடன் செயல்படுவதாகவும், “ஒவ்வொரு நொடியும் கண்காணிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வாக்குகள் எதிரணிக்கு தாவாமல் பாதுகாப்பது இப்போது மிகப்பெரிய சவால்” என்றும் கூறினார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது: கட்சியின் உள்ளக ஒற்றுமை மிக அவசியம். ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு பிரிவு தலைவரும் நேரடியாக தரையைத் தொட்டு செயல்பட வேண்டும். வெற்றி தானாக வந்து சேராது; அதை நாம் கடின உழைப்பால் பிடிக்க வேண்டும்,” என்றார். சபாவில் அரசியல் நிலைமை மிக வேகமாக மாறக்கூடிய ஒன்றாக இருப்பதால்,
“அதீத நம்பிக்கையை விட்டு விட்டு, காலுறை மடித்து களத்தில் இறங்க வேண்டிய நேரம் இது. வெற்றியை உறுதி செய்ய ஒரே வழி — கடைசி நிமிடம் வரை உழைப்பு,” என்று ரமணன் தெளிவாகச் செய்தி தெரிவித்தார்.

அவர் மேலும், “இங்கு யாரும் தங்களை முன்னதாகவே வெற்றியாளர்களாகக் கருதிக் கொள்ளக்கூடாது. மக்கள் மனநிலை ஒரு இரவில் மாறிவிடும்; அதனால் ஒவ்வொரு வாக்கும் கணக்கில் முக்கியம்,” என்று கட்சித் தொண்டர்களுக்கு ஊக்கமும் எச்சரிக்கையும் இணைந்த செய்தியை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *