பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் அமர்க்கலமாக அரங்கேறியது.

பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின்தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் அமர்க்கலமாக அரங்கேறியது.

கடந்த 17-ஆம் திகதி ஒன்றிணைவோம் ஒளியேற்றுவோம் எனும் கருபொருளோடு பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் தீபாவளி கொண்டாட்டம் பள்ளியின் ஆசிரியர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளியின் அழைப்பினை ஏற்று இந்நிகழ்ச்சிக்குச் சுல்தானா ரொகாயா அறவாரியத்தின் தலைவர் மாண்புமிகு டத்தோ சுகுமாறன் இராமன் , அவர்தம் துணைவியார் டத்தின் அனித்தா தேவி, சுல்தானா ரொகாயா அறவாரியத்தின் நிர்வாகி திரு.அர்வின், மாசாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தலைவர் ஐயா திரு.சுப்பிரமணியம் கிருஷ்ணன், இளங்கோ நற்சேவை இயக்கத்தின் தலைவர் ஐயா திரு.இளங்கோ அவர்களின் பிரதிநிதி ஐயா திரு. ராமக்கிருஷ்ணன்,டிலீனா மற்றும் அருன் தெக்ஸ்தாய்ல் நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி.லீனா, ஜொகூர் மாநில இந்து சங்கத் தலைவர் திரு.விஜயன், பாசீர் கூடாங் கொங்கு அமைப்பின் தலைவர் திரு. கதிரேசன் செயலாளர் திரு.புனிதன்,முன்னாள் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.நடராஜா, முன்னாள் தலைமையாசிரியர்கள் திருமதி. ஷகிலா, திரு.நடராஜன், திரு.சீனிவாசகம், மோக்‌ஷா நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சரவணன்,சிங்கையிலிருந்து சகோதரி ரீனா என பலதரப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பித்ததாகப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி திலகவதி சக்கரபாணி அவர்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் முத்தமிழ்சார் படைப்புகள் படைக்கப்பட்டு வருகையாளர்களின் பாராட்டை வெகுவாகப் பெற்றது. கடைநிலை மாணவர்களாலும் சிறந்த படைப்பினைப் படைக்க முடியும் என நிகழ்ச்சியை நெறியாளுகை செய்த காக்கும் கரங்கள் வகுப்பில் பயிலும் மாணவி பறைசாற்றியது வருகையாளர்களின் பலத்த கரகோசத்தைப் பெற்றது.

 

பள்ளியில் பயிலும் 50 வசதி குறைந்த மாணவர்களுக்குப் பலகாரங்கள், உடைகள் , உணவுப்பொருட்கள் மற்றும் பண அன்பளிப்பு வழங்கப்பட்டது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அம்மாணவர்களுக்காகப் பிஸ்கட் வகை பலகாரங்களை ஏற்பாடு செய்து தந்தனர். உணவுப்பொருட்களையும் நன்கொடையையும் வழங்கிய மாசாய் முருகன் ஆலயத்தலைவர் திரு.சுப்பிரமணியம், டிலீனா தெக்ஸ்தாய்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திருமதி லீனா, சிங்கை சகோதரி ரீனா,மோக்‌ஷா நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சரவணன்,ஈசி அச்சகத்தின் உரிமையாளர் திரு.அவ்வின்,திருமதி அனுராதா மற்றும் உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளி தலைமையாசிரியர் திருமதி திலகவதி சக்ரபாணி நன்றி கூறினார்.

பள்ளியில் பயிலும் காக்கும் கரங்கள் வகுப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு அவ்வியக்கத்தின் சார்பில் பண அன்பளிப்பு வழங்கப்பட்டதோடு பாசீர் கூடாங் கொங்கு இயக்கத்தினர் 4 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை அன்பளிப்பாக வழங்கினர்.

 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகச் சிறப்பு வருகை புரிந்திருந்த சுல்தானா ரொகாயா அறவாரியத்தின் தலைவர் மாண்புமிகு டத்தோ சுகுமாறன் இராமன் அவர்கள் மாணவர்களின் ஆற்றலைப் பாராட்டியதோடு அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் தரமான தலைமைத்துவத்தைக் கொண்டு சிறப்பான முன்னெடுப்புகளை மாணவர் நலனுக்காக முன்னெடுத்து வரும் பள்ளியின் தலைமையாசிரியர் திலவகதி சக்ரபாணி அவர்களையும் பாராட்டி பள்ளிக்கு ரி.ம.10000.00 வழங்குவதாக அறிவிப்பு செய்தார்.

வருகை புரிந்திருந்த அனைவரும் அன்றைய தினம் சுல்தானா ரொகாயா அறவாரியத்தின் நிர்வாகி திரு.அர்விந்தரன் அவர்களின் அகவை நிறை நன்னாளையும் பள்ளி மாணவர்களோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ்வருட பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியின் தித்திக்கும் தீபத்திருநாள் கொண்டாட்டம் எதிர்ப்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இறையின் ஆசியோடும் பள்ளியின் ஆசிரியர் கழகத்தின் முயற்சியோடும் நடைபெற்றுள்ளதை எண்ணி அகம் மகிழ்வதோடு உடன் நின்று உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுறவுகளுக்கும் நன்றி பாராட்டி தீபத்திருநாள் வாழ்த்துகளையும் கூறினார் பள்ளியின் தலைமையாசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *