சிலாங்கூர், 25;செப்டம்பர் 2025 –

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் ஊடகத் துறையில் தங்கள் வாழ்நாள் பங்களிப்பைச் செய்த பத்து மூத்த பத்திரிகையாளர்கள் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
இந்நிகழ்வுக்கான தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களை அடையாளம் காணும் பொறுப்பு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் பட்டியல் மாநில அரசிடம் பரிந்துரைக்கப்படும் என, மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் நடைபெறவிருக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டண உதவி வழங்கும் நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர்களை சிறப்பிக்கும் சிறப்பு அங்கமும் இடம்பெறும் என அவர் மீடியா சிலாங்கூர்-க்கு அளித்த நேர்காணலில் கூறினார்.
“கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டண உதவி நிகழ்ச்சியில், இவ்வாண்டு மூத்த பத்திரிகையாளர்களை கௌரவிப்போம் என்று அறிவித்திருந்தேன். அந்த வாக்குறுதியை இம்முறை நிறைவேற்றவிருக்கிறோம்,” என்றார் பாப்பாராய்டு.
தமிழ் பத்திரிகையாளர்களை குருமார்களுடன் ஒப்பிட்ட அவர், “அவர்கள் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்கின்றனர். கடந்தாண்டு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை கௌரவித்ததைப் போல், இம்முறை பத்திரிகையாளர்களை கௌரவிக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இந்த கௌரவிப்பு நிகழ்ச்சி மூத்த பத்திரிகையாளர்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரமாகவும், இளம் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கமாகவும் அமையும் எனவும் அவர் வலியுறுத்தினார்.















