பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0 –

கோலாலம்பூர் – செப்டம்பர் 17 & 21, 2025
கருஞ்சட்டை இளைஞர் படையினர், தோழமை இயக்கங்களின் இணைப்புடன், பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0-வை வரும் செப்டம்பர் மாதம் மலேசியாவில் வெகு சிறப்பாக நடத்த உள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பகுத்தறிவுப் பயணம், மலேசிய மண்ணில் தொடர்ந்து நடைபெறவுள்ளது என்பதை ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் கருத்தரங்கு, தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17, 2025 அன்று இயங்கலை (Online) வாயிலாகத் தொடங்குகிறது. திராவிடம், சமூக நீதி, பெரியார் ஆகிய தலைப்புகளில் பன்னாட்டு பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளைப் பகிரவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 21, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தலைநகர் கோலாலம்பூரில் அரங்கமொன்றில் நேரடியாக கருத்தரங்கு நடைபெறும். இந்த நிகழ்ச்சி இரு அமர்வுகளாக நடைபெறுகிறது.
-
முதல் அமர்வு (காலை): தேசிய மொழியில் நடைபெறும் இந்நிகழ்வில் பல்லின மலேசியர்கள் பங்கேற்று, இனப் பாகுபாடு, மதத் தீவிரவாதம் மற்றும் தேசிய ஒற்றுமை குறித்த விவாதங்கள் இடம்பெறும்.
-
இரண்டாம் அமர்வு (பிற்பகல்): தமிழ் மொழியில் நடைபெறும் இந்த அமர்வில் சாதியப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு மற்றும் பகுத்தறிவுச் சிந்தனை குறித்த உரைகள் இடம்பெறும். இவை குறிப்பாக இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருஞ்சட்டை இளைஞர் படையினர், “மண்ணுக்கேற்ற அரசியல் பார்வையையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்துடன்” இந்த கருத்தரங்கினை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன் வெற்றி கண்ட இந்நிகழ்வு, மீண்டும் சிறப்பாக நடைபெற, அனைவரின் ஆதரவும் வேண்டப்படுகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.















